முத்துபேட்டை, பிப்ரவரி 04/2016: திருவாரூர் மாவட்டதில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த சிறிய நகரம். சென்னையிலிருந்து சுமார் 350 கி.மீ தெற்கே அமைந்துள்ளது.
இவ்வூரில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகள் மற்றும் சதுப்புநில பகுதிகள்(Mangrove Forest) எனும் அழகிய சுற்றுலா தலம் இன்னும் வெளியுலகிற்கு தெரியாமலே உள்ள ஒரு அற்புதமான பொக்கிஷம். சொல்லப்போனால் இப்பகுதியில் உள்ள பலரும்கூட இங்கு சென்றுவந்ததில்லை எனலாம்.
பாமனி ஆறு, கோரை ஆறு, கிளைதாங்கி ஆறு, மரைக்கா கோரையாறு என பல்வேறு ஆறுகள் இப்பகுதியில் வங்க கடலில் (பாக் ஜலசந்தியில்) கலக்கும் இடமாகும். இந்த ஆறுகள் உருவாக்கியுள்ள லகூன் எனும் பகுதியும்,
இங்கு அமைந்துள்ள சதுப்பு நில காடுகளும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் இப்பகுதியை மேலும் ரம்மியமாக்குகிறது.
இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் எளிதில் செல்லும் வண்ணம் சுந்தரம் பாலம் அருகேயோ அல்லது வேறு இடத்திலோ பிச்சாவரம், முட்டுக்காடு போன்ற இடங்களில் உள்ளது போன்ற படகுத்துறைகளைஅமைத்து தகுந்த வசதிகளை தமிழ்நாடு அரசும் சுற்றுலா துறையும் ஏற்படுத்தினால் கண்டிப்பாக இது அனைவரும் விரும்பும் ஒரு சுற்றுலா ஸ்தலமாக மாறும்.
தில்லைவிளாகம் ஸ்ரீராமர் கோவில் மற்றும் கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் போன்ற சரித்திர புகழ்பெற்ற ஆலயங்கள் அருகில் உள்ள முக்கிய இந்து ஆலயங்கள். ஜாம்பவனோடை தர்கா நாகூர் தர்காவைவிட பழமை வாய்ந்தது. இங்கு தினமும் ஏராளமான முஸ்லிம் யாத்திரீகர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற பகுதிகளிலிருந்தும் வருகின்றனர்.
இவ்வூருக்கு செல்லும்போது இங்குள்ள ஐயர் கடை அல்வாவும் நாகூர் ஆண்டவர் கடை தம்ரூட் அல்வாவவையும் ருசிக்க மறக்காதீர்கள். திருநெல்வேலி அல்வாவைவிட ருசியானது. அதேபோல இங்குள்ள பரோட்டா கடைகளின் பரோட்டா சுவையைவிட தமிழ்நாட்டில் வேறு எங்கும் கிடைக்காது (மதுரை மற்றும் விருதுநகர் உட்பட) என்று சவால் விட்டு சொல்லலாம்.
வேளாங்கன்னி, நாகூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை, திருவாரூர், திருத்துறைபூண்டி, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் போண்றவை அருகில் உள்ள முக்கிய நகரங்கள்.
இவ்வளவு பெருமைவாய்ந்த இவ்வூரை இன்னும் தாலுகாவாக மாற்றுவதற்கும், இங்குள்ள சுற்றுலா தளத்தை உலக மக்களுக்கு கொண்டு சேர்கவும், மூடப்பட்டுள்ள காரைகுடி - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. நிறைவேறுமா?
நன்றி
முத்துபேட்டை, ராஜேஷ்
நன்றி
முத்துபேட்டை, ராஜேஷ்
0 comments:
Post a Comment