முத்துப்பேட்டை, ஜூன் 10: தூத்துக்குடியில் இருந்து மீன் லோடு ஏற்றிக் கொண்டு ஒரு வேன் வேளாங்கண்ணி நோக்கி வந்தது. இந்த வேன் இன்று காலை 7 மணியளவில் முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வேன் நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள குடிசை வீட்டு முன் நின்ற 10-ம் வகுப்பு மாணவன் சபரிவாசன் மீது மோதி விட்டு நிலை தடுமாறி குடிசைக்குள் புகுந்தது. அப்போது குடிசைக்குள் இருந்த மகாலிங்கம் மனைவி பானுமதி (45), அவரது மகன் அசோகன் (20), பக்கத்து வீட்டை சேர்ந்த பிரியா மற்றும் சபரிவாசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை 108 ஆம்புலன்சில் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பானுமதி பரிதாபமாக இறந்தார்.
காயம் அடைந்த 3 பேருக்கும் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் தூத்துக்குடியை சேர்ந்த சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.