முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மவுத் அறிவிப்பு "எம்.நசீர்"

முத்துப்பேட்டை, செப்டம்பர் 17 : துளசியாப்பட்டினம் மர்ஹும் MM . முஹம்மது ஹனிபா அவர்களின் மகனும், மர்கும் முஸ்தபா அவர்களின் மருமகனுமாகிய "எம்.நசீர்" அவர்கள் இன்று காலை 10 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாசா நாளை கலை 7 மணியளவில் துளசியாப் பட்டினம் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்

RMP. ஷாகுல் ஹமீது
Source from Muthupettai Express

முத்துப்பேட்டை ஆசாத் நகர் பள்ளிக்காக உதவிட வாரீர்!!!

முத்துப்பேட்டை, செப்டம்பர் 17 : அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக... திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா மஸ்ஜித் அழகிய வடிவமைப்பில் புதிதாக கட்டப் பட்டு வருகிறது. (அல்ஹம்து லில்லாஹ்) இந்த இறை இல்ல கட்டுமானப் பணிகளுக்கு உங்களது நன்கொடைகளை வாரி வழங்கவும். எவர் ஒருவர் இவ்வுலகில் அல்லாஹ் வுக்காக ஒரு மாளிகையை கட்டுவரோ, அவருக்காக அல்லாஹ் மறுமையில் அழகிய மாளிகையை கட்டுகிறேன் என தனது திருமறையாம் குர்ஆனில் கூறியுள்ளான். இதனை உணர்ந்து சகோதர, சகோதரிகள் தங்களது நன்கொடைகளை அல்ல்லஹ்வின் ஆலய கட்டுமானப் பணிகளுக்கு வாரி வழங்குகள். அல்லாஹ்வின் அருளை பெறுங்கள். தங்களது நன்கொடைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

MOHAMED JALALUDEEN
A/C,NO: MJ2 609201022473
ICICI BANK
MUTHUPET. BRANCH

மேலும் தொடர்புக்கு
வழக்கறிஞர். ஜனாப். தீன் முஹம்மத்.
தொலைபேசி எங்கள்: 0091 - 98655 57556, 99654 18801.

இப்படிக்கு

ஆசாத் நகர் பள்ளி நிர்வாகம்.





முளிம்கள் என்ன செய்தார்கள் இந்த உலகிற்கு?

உலகம் செப்டம்பர் 17 : நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு? அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?இப்படிப்பட்ட சில கேள்விகளை நம்மில் பலர், முஸ்லிமல்லாத சகோதரர்கள் சிலரிடமிருந்து கேட்டிருக்கலாம்...இதனை கேட்கும் போதெல்லாம் என்னுள் தோன்றக்கூடிய இரு கேள்விகள்...இவர்கள் கண்முன்னால் எண்ணிலடங்கா சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றி. இவர்கள் ஏன் இன்னும் அறியாமையில் இருக்கின்றனர்?ஏன் ஐரோப்பியர்கள் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தனர்? ஏன் ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்தனர்? முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமல் நவீன அறிவியல் இல்லையே, இதனை ஏன் பள்ளிகளில் நம் சகோதரர்கள் படிக்க விடாமல் செய்தனர்?
குர்ஆன் அருளப்பட்ட காலம் தொடங்கி 1600 ஆம் ஆண்டுவரை, சுமார் ஆயிரம் ஆண்டுகள் முஸ்லிம்கள் அறிவியலின் பல பிரிவுகளில் சிறந்து விளங்கினர்.
இந்த காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் அறிவியலுக்கான பங்களிப்பு என்பது அளப்பறியது. முஸ்லிம்களில் நூற்றுக்கணக்கான அறிவியல் மேதைகளையும், கணித மேதைகளையும் உருவாக்கிய காலகட்டம். அறிவியலின் பல பிரிவுகளில் தங்களின் தனி முத்திரையை முஸ்லிம்கள் பதித்தனர். பாக்தாத்தும் (Baghdad), ஸ்பெயின்னும் (Spain) உலகின் தலைச்சிறந்த கல்வி கற்கும் இடங்களாக இருந்தன. பல்வேறு நாட்டு மாணவர்கள் படிப்பதற்காக இந்த இடங்களுக்கு தான் வருவார்கள். அரபி மொழியில் தான் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.
இந்த காலக்கட்டத்தில் தான், முஸ்லிம்கள் எழுதிய பல ஆராய்ச்சி நூல்கள் லத்தீன் (Latin) மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பிய தேசங்களுக்கு சென்றன. இந்த நூல்கள் தான் ஐரோப்பிய தேசங்களின் நூலகங்களை அலங்கரித்தன. இந்த நூல்களை தான் ஐரோப்பிய அறிவியலாளர்கள் தங்கள் ஆராய்ச்சிகளுக்கு அடிப்படையாக பயன்படுத்தினார்கள். முஸ்லிம்களின் பல ஆராய்ச்சிகளை பயன்படுத்திதான் ஐரோப்பியர்கள் அறிவியலில் முன்னேறினார்கள்.
ஐரோப்பியர்களின் பல ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாய் விளங்கியது முஸ்லிம்களின் ஆராய்ச்சிகள்தான். முஸ்லிம்களின் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாய் விளங்கியது குர்ஆன் தான், அதன் "ஆராய்ந்து செயல்படுங்கள்" என்ற வார்த்தைகள்தான்.
அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.
முஸ்லிம்களின் பங்களிப்பை முழுமையாக எழுதுவதற்கு மிக அதிக பக்கங்கள் தேவைப்படும். அதனால் நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருப்பது ஒரு பிரிவைப்பற்றிதான். இதனை அடிப்படையாக வைத்து, இன்ஷா அல்லாஹ், நீங்கள் உங்களுடைய ஆராய்ச்சியை தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த பதிவின் நோக்கம் ஒன்றுதான், ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு நம்மவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதுதான்.
இதனை நான் சொல்லவில்லை, வரலாற்று ஆசிரியர்கள் தான் சொல்லுகிறார்கள்.
இந்த பதிவில் கணிதத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...
கணிதம் என்பது ஒரு மிகப்பெரிய துறை. அதில் பங்காற்றிய முஸ்லிம்களின் எண்ணிக்கையும் அதிகம். இங்கு கணிதத்துறையில் முஸ்லிம்களின் மிக முக்கியமான சில பங்களிப்புகளை மட்டும் காண்போம்...இன்ஷா அல்லாஹ்
கணிதத்தின் பிரிவுகளில் முக்கியமானவை நான்கு, அவை
  1. எண் கணிதம் (Arithmetic)
  2. அட்சர கணிதம் (Algebra)
  3. கேத்திர கணிதம் (Geometry)
  4. கோணவியல் (Trignometry)
இந்த நான்கிலும் முஸ்லிம்களின் பங்களிப்பை ஒவ்வொன்றாக காண்போம்.
1. எண் கணிதம் (Arithmetic):
எண் கணிதம் என்பது எண்களைப்பற்றியும் (0 to 9), எண்ணும் முறைகளைப் (like 11, 874, 9001) பற்றியும் மற்றும் அதனைச் சார்ந்த கூட்டல் (Addition), கழித்தல் (subtraction), பெருக்கல் (Multiplication) மற்றும் வகுத்தல் (Division) பற்றியும் விளக்கும் கணிதத்தின் ஒரு பிரிவாகும்.
எண்கள்:
இன்று நாம் பயன்படுத்தக்கூடிய எண்கள் "0,1,2,3,4,5,6,7,8,9", இந்த எண்களுக்கு பெயர் "அரேபிய எண்கள் (Arabic Numerals)" என்பதாகும். அதாவது இன்று நாம் பயன்படுத்தக்கூடிய எண்களை முதன்முதலில் ஐரோப்பிய தேசங்களுக்கு அறிமுகப்படுத்தியது முஸ்லிம்கள்தான்.
நீங்கள் தற்போதுள்ள அரபி எண்களையும், இப்போது நாம் பயன்படுத்தும் எண்களையும் பார்த்தீர்களானால், இவ்விரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை அறிந்துக்கொள்வீர்கள். ஐரோப்பியர்கள் அரபி எண்களை எடுத்து அதில் மாற்றங்களை செய்து தற்போதுள்ள எண்களாக மாற்றிவிட்டனர்.
இந்த "சைபர் (Cipher/Cypher, '0') " என்ற வார்த்தையை கூர்ந்து கவனியுங்கள். அரபியில் இந்த சைபரை குறிக்க "சிபர் (Sifr)" என்ற எண்ணை பயன்படுத்துவோம். இன்று நாம் '0' வை குறிக்க பயன்படுத்தும் சைபர் என்ற வார்த்தை அரபியில் உள்ள சிபர் (Sifr) என்ற வார்த்தையிலிருந்து வந்ததுதான்.
அரபியில் இருந்து வந்த எண்கள் என்பதால் ஐரோப்பியர்கள் இன்று நாம் பயன்படுத்தும் எண்களுக்கு அரேபிய எண்கள் என்று பெயர் சூட்டிவிட்டனர்.
அதனாலயே இந்த எண்கள் இன்று வரையும் அரேபிய எண்கள் (Arabic Numerals) என்று அழைக்கப்படுகின்றன.
எண்ணும் முறை:
மேற்கொண்டு செல்லும்முன் இங்கே சற்று நிறுத்தி சில முக்கிய தகவல்களை பார்க்கவேண்டியது இந்த பதிவிற்கு அவசியமாகிறது.
அரேபிய எண்களுக்கு முன்னமே உலகில் எண்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. அவைகளை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்கள்
  • கிரேக்கர்கள்
  • எகிப்தியர்கள்
  • ரோமானியர்கள் மற்றும்
  • ஹிந்துக்கள்
இவர்களில் ரோமானியர்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்கள் முறைதான் பிரபலமானது. முதலில் ரோமானியர்களின் எண்களை பார்ப்போம். இந்த வகை எண்கள் இன்றளவும் புழுக்கத்தில் இருக்கின்றன. நமக்கும் நன்கு அறிந்த ஒன்று.
1-I, 2-II, 3-III, 4-IV, 5-V, 6-VI ...... 10-X, 11-XI, 12-XII....
இந்த வகையான எண்களில் உள்ள மாபெரும் பிரச்சனை என்னவென்றால், மூன்று வரை எண்களை அடையாளம் காண்பது எளிது. ஆனால் அதன் பிறகு மிகவும் கடினமாகிவிடுகிறது, பெரிய தொகையென்றால் அவ்வளவுதான்...உதாரணத்துக்கு 323 என்ற எண்ணை எழுதவேண்டும் என்றால், ரோமானிய முறைப்படி CCC XX III (C=100, X=10, I -1) என்று எழுதவேண்டும். இது ஒரு கடினமான முறை தான்.
மற்றுமொரு பெரிய பிரச்சனை என்னவென்றால், '0' நடுவில் வந்தால் மாபெரும் குழப்பம்தான். உதாரணத்துக்கு 302 என்று எழுதவேண்டுமானால் CCCII என்று எழுதவேண்டும். ஆனால் XXX II என்று எழுதினாலும் அதனை 302 ஆக எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
ஆக, எந்த ஒரு எண்ணையும் ரோமானிய வடிவங்களால் குறிக்க முடியும் என்றாலும், அது ஒரு கடினமான கணிதமுறையாகவே இருந்தது.
அடுத்தது ஹிந்து எண்கள். இவை மிக வித்தியாசமானவை. ஒன்றில் இருந்து ஒன்பது வரை உள்ள ஒவ்வொரு எண்களையும் ஒவ்வொரு வடிவத்தால் குறிப்பிட்டனர்.
இந்த முறை மிக சுலபமானது, எண்ணுவதற்கும் எளிதானது. நீங்கள் மேலே பார்க்கக்கூடிய வடிவங்கள் ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது.
ஆனால் நீங்கள் ஒன்றை இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டும். ஹிந்துக்களின் இந்த முறையில் '0' வை குறிக்கும் எந்த ஒரு வடிவமும் இல்லை. பின்னர் ஹிந்துக்களால் '0' என்ற வடிவம் கண்டுபிடிக்க பட்டதாக சொல்லப்பட்டாலும் அதற்கு ஒன்பதாம் நூற்றாண்டுவரை எந்த ஒரு சான்றுமில்லை. குவாலியரில் கண்டுபிடிக்கப்பட்ட 876 ஆம் காலத்திய கல்வெட்டில் தான் '௦௦௦0' இருந்தது ( தற்போது நாம் பயன்படுத்தும் சைபர் போலல்லாமல் சிறிதாக இருந்தது), இதுதான் முதல் தெளிவான சான்று. இதற்கு முன் என்றால் ஆர்யபட்டர் 'க (Kha)' என்ற எழுத்தை "ஒன்றுமில்லாததை(Void/empty place)" குறிக்க பயன்படுத்தி இருக்கிறார். உதாரணத்துக்கு 302 ஐ குறிக்க வேண்டுமானால் 3க2 என்று பயன்படுத்தி இருக்கிறார்.
ஆக, ஹிந்துக்கள் முதலில் கண்டுபிடித்த எண்களில் '0' கிடையாது. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சைபரையும் (0) அவர்கள் ஒரு எண்ணாக (நம்பர்ராக) கருத இல்லை. அதனை "ஒன்றுமில்லாததை (Hindus used zero to represent a empty place but didn't include it in the set of Numbers) " குறிக்க மட்டுமே பயன்படுத்தினர். ஹிந்துக்களை பொறுத்தவரை 1,2,3,4,5,6,7,8,9 மட்டும்தான் எண்கள், '0' கிடையாது.
பதிவிற்கு வருவோம்....
சரி, முஸ்லிம்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம். முஸ்லிம்களுக்கு கணிதத்தில் பயன்படுத்த வடிவங்கள் தேவைப்பட்டது. ரோமானிய, கிரேக்க மற்றும் எகிப்திய எண்கள் கடினமானதாகப்பட்டது.
ஹிந்துக்களின் எண்கள் அவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தின. தாங்களும் ஏன் ஒவ்வொரு எண்ணையும் குறிக்க ஒவ்வொரு வடிவத்தை பயன்படுத்த கூடாது என்றெண்ணி தற்போதுள்ள அரேபிய எண்களை (ஹிந்துக்களின் வடிவமைப்பை பார்த்து தங்கள் எண்களை உருவாக்கியதால், இந்த அரேபிய எண்கள் அரபி-ஹிந்து எண்கள் என்றும் அழைக்கப்படுகின்றன) வடிவமைத்தனர்.
முஸ்லிம்கள் ஒன்றுமில்லாததை குறிக்க "சிபர் (sifr)" என்ற வடிவத்தை பயன்படுத்தினர், ஆனால் அவர்கள் செய்த ஒரு அளப்பரிய செயல் "சிபர் (sifr)" வடிவத்தை எண்களின் எண்ணிக்கையில் சேர்த்துக்கொண்டது தான் (They added Zero in the list of Numbers).
அதாவது சைபரை (௦0) ஒரு எண்ணாக முதன்முதலில் கண்டுபிடித்தது முஸ்லிம்கள் தான்.முஸ்லிம்களின் எண்கள் 0,1,2,3,4,5,6,7,8,9 என்று நாம் இப்போது பயன்படுத்தக்கூடிய அனைத்து எண்களையும் கொண்டிருந்தது.
இந்த எண்களை கொண்டுதான் நாம் இன்று பயன்படுத்தக்கூடிய எண்ணும் முறைகள்கொண்டுவரப்பட்டன. அதாவது, ஒன்று முதல் ஒன்பது வரை எண்ணிவிட்டு பின்னர் "பத்து" என்றால் ஒன்று போட்டு பக்கத்தில் சைபர் போடுகிறோம், பின்னர் பதினொன்றிலிருந்து பத்தொம்பது வரை எண்ணி பிறகு "இருபது" என்பதை இரண்டு போட்டு பக்கத்தில் சைபர் போடுகிறோம் அல்லவா,இதெல்லாம் முஸ்லிம்கள் சைபரை ஒரு எண்ணாக சேர்த்ததால் வந்ததுதான். அதுபோலவே 20, 3000, 400000 etc.... இன்றைய எண்ணும் முறைகளை எளிமையாக, நேர்த்தியாக கொண்டு வந்தது முஸ்லிம்கள் தான் அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் சைபரை ஒரு எண்ணாக சேர்த்ததால் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவை மிக எளிமையாக, நேர்த்தியாக கணக்கிடப்பட்டன.
"Hindu Mathematicians in Southern India first created zero but did not recognise it as Number. They used Zero only as a place holder when no number existed. Add 4+6, you get 10, one in tens column and 0 in one's column. The Hindus realised that they needed a way to indicate that there was no number in units position.
For 400 years, that was the only use of Zero. No one added, subracted, multiplied, or divided it. It was only used to hold an empty place for a missing Number. So, 2003 could be written differently than 2030 or 23.
Before 800 AD the Hindu number system migrated west into Arab world. There a brilliant Mathematician, Al-Khwarizmi, invented Zero as a Number. He realised that it has to be a number in order for the emerging system of algebric equation to work" --- Kendall F.Haven, in his book Marvels of Math, Fascinating reads and awesome activites, page no.13.
முஸ்லிம்களின், சைபரை ஒரு எண்ணாக கணக்கிட்ட இந்த முறைதான் இன்று நாம் கணிதத்தை எளிமையாக எடுத்து செல்ல உதவுகிறது. இது வரலாற்றில் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக புகழவும் படுகிறது.
அதுமட்டுமல்ல, "தசம பின்னல் (Decimal Fractions)" முறையை கண்டுபிடித்ததும் முஸ்லிம்கள்தான்.உதாரணத்துக்கு,கணிதத்தில் 10/4 என்றால் 2.5 என்று உபயோகப்படுத்துகிறோமே, இந்த தசம பின்னல் முறையை கண்டுபிடித்ததும் முஸ்லிம்கள்தான்.
பின்னாட்களில் முஸ்லிம்களின் அரபி கணித புத்தகங்கள் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பாவிற்கு சென்றன. அதனை ஐரோப்பியர்கள் தங்கள் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்திக்கொண்டனர்...
ஆக, எண் கணிதத்தை (Arithmetic Maths) பொறுத்தவரை நாம்தான் இன்றைய கணிதத்திற்கு முன்னோடி. இன்று இருக்ககூடிய
  • எண்களாகட்டும் (0 to 9),
  • எண்ணும் முறைகளாகட்டும் (10,30,8000...),
  • கூட்டல் போன்ற செயல்களாகட்டும்,
  • தசம பின்னல் முறைகளாகட்டும் முஸ்லிம்களின் பங்களிப்பு முதன்மையானது
இப்போது நான் மேலே சொன்ன தகவல்களை எல்லாம் யார் கண்டுபிடித்தார்கள் என்று பார்ப்போம்.
சிபர் (sifr) வடிவத்தை ஒரு எண்ணாக கணக்கிட்டது:
சைபரை ஒரு எண்ணாக கணக்கிட்டு கணித துறையில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தியவர், உலகின் மிகச்சிறந்த கணிதமேதைகளில் ஒருவர் என்று புகழப்படும் அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்ன் மூஸா அல் கரிஷ்மி (Abu Abdullah Muhammed ibn Musa al Khwarizmi, 780-850) அவர்கள். அல்ஜீப்ராவை (Algebra) கண்டுபிடித்ததும் இவரே.
இவர் படம் பொறித்த தபால் தலையை சோவியத் ரஷ்யா 1983 ஆம் ஆண்டு வெளியிட்டு இவருக்கு பெருமை சேர்த்தது.
இவர் அறிவியலின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியிருக்கிறார். இங்கு நாம் கணித துறையை மட்டும் பார்ப்போம். இவர் ஹிந்துக்களின் எண்களை எடுத்து அதில் சிபரை சேர்த்து கணிதத்துறையை மற்றுமொரு பரிமாணத்திற்கு எடுத்துச்சென்றார். இவருடைய நூல்களில் இந்த எண்களை பயன்படுத்தி கூட்டல் மற்றும் கழித்தல் போன்றவற்றை மிக எளிதாக, நேர்த்தியாக விளக்கி காட்டினார். இவருடைய இந்த பங்களிப்பே இன்றைய எண்கணித முறைக்கு முன்னோடி.
தசம கணித (Decimal Fractions) முறையை கண்டுபிடித்தது அல்-கசி (Al-Kashi) அவர்கள், பதினைந்தாம் நூற்ற்றாண்டின் முற்பகுதியில் கண்டுபிடித்தார். கணிதத்தில் இவருடைய பணி மிகச்சிறந்தது.
இந்த துறைக்கு இவர்களைத்தவிர பல முஸ்லிம்கள் தங்கள் பங்களிப்பை தந்திருக்கின்றனர், நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களானால் அறிந்து கொள்வீர்கள்.
2. அட்சர கணிதம் (Algebra)
இன்று பல துறைகளில் இன்றியமையாததாய் இருக்கும் அட்சர கணிதத்தை கொண்டு வந்தது நாம் முன்னே பார்த்த அல் கரிஷ்மி அவர்கள்தான். அட்சர கணிதத்தின் தந்தை (Father of Algebra) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இதைப் பற்றி எழுதிய புத்தகம் "கிதாப் அல்-ஜபர் வல் முகாபுலா (Kitab al-jabr wa-l-Muqabulaa, Book on calculation by completion and balancing, 830 AD)". இந்த "அல்-ஜபர்" என்ற வார்த்தைதான் "அல்ஜீப்ரா" ஆனது. அதுபோல இவருடைய பெயரை லத்தீன் மொழியில் மாற்றம் செய்யும் போது உருவான வார்த்தை தான் "அல்காரிதம் (Algorithm)" என்பது. மிக அழகாக, எளிமையாக, நேர்த்தியாக, பல்வேறு உதாரணங்களுடன் தன்னுடைய வாதத்தை விளக்கினார். இவருடைய இந்த பணி கணிதத்தில் ஒரு மாபெரும் புரட்சி. சதுக்கம் (Square) மற்றும் வர்க்கமூலங்களை (Square root) மிக அழகாக பயன்படுத்தி காட்டினார். இவர் மட்டுமல்லாமல் இந்த துறையில் சாதித்த முஸ்லிம்கள் பலர், இவர்கள் அல்- கரிஷ்மி அவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லை. சரித்திரம் பின்வரும் கணித மேதைகளையும் மிக அதிகமாகவே புகழ்கிறது.
  • சிறந்த புலவராக அறியப்பட்ட ஓமர் கையாம் (Omar Khayyam) அவர்கள் ஒரு மிகச்சிறந்த கணிதமேதையும் ஆவார்.
  • அபுல் கமில் (Abul Kamil) அவர்கள்
  • அபு பக்கர் கார்கி (Abu Bakr Karkhi) அவர்கள் என்று ஏராளமானோர்...
இவர்கள் அனைவரும் அல்-கரிஷ்மி அவர்களின் நூலை அடிப்படையாகக்கொண்டு, அட்சர கணிதத்தை மேலும் பளபளப்பாக்கினர். இவர்களுடைய நூல்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு, கணிதத்துறையில் ஒரு பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இன்றைய அட்சர கணிதத்தை முழுமையாக கண்டுபிடித்தது முஸ்லிம்கள் என்றால் அது மிகையாகாது.
3. கேத்திர கணிதம் (Geometry)
கணிதத்தின் மற்ற துறைகளைப் போலவே கேத்திர கணிதத்தில் முஸ்லிம்களின் பங்கு அளப்பறியது. முஸ்லிம்களுக்கு முன்னே இதில் சிறந்து விளங்கியவர்கள் எகிப்தியர்கள், பிரமீட்களை கேத்திர கணித முறையை பயன்படுத்தி கட்டியவர்கள் அவர்கள். அதுபோலவே கிரேக்கர்களும் இந்த துறையில் தனி ஆர்வம் கொண்டிருந்தனர். இந்த துறையில் சிறந்து விளங்கிய யுக்லிட் (Euclid) அவர்கள் ஒரு கிரேக்கர். முஸ்லிம்கள் இந்த துறையில் ஆற்றிய ஒரு பெரிய பங்களிப்பாக உலகம் பார்ப்பது, அவர்கள் அந்த கிரேக்க மற்றும் எகிப்திய நூல்களை அரபியில் மொழிபெயர்த்து அந்த நூல்களை அழிய விடாமல் காத்தது தான். மொழிபெயர்ப்பு என்றால் சாதாரணமில்லை. இந்த துறையில் சிறந்து விளங்கியவர்களால் மட்டுமே செய்ய முடியும். கிரேக்க மற்றும் எகிப்திய நூல்களை மொழி பெயர்க்குமளவு முஸ்லிம்கள் கணித அறிவை கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் அந்த நூல்களை மொழிபெயர்க்க காரணம், அவற்றை தங்கள் மொழியில் புரிந்துக்கொண்டு மேலும் இந்த துறையில் முன்னேற்றங்களை கொண்டுவரவேண்டும் என்பதற்காகத்தான். முஸ்லிம்கள் அரபியில் மொழி பெயர்த்த இந்த நூல்கள்தான் பின்னர், அரபியில் இருந்து லத்தீன் மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டன. பின்னர் ஐரோப்பியர்கள் அதனை எடுத்துக்கொண்டனர். ஆக முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லை என்றால் கிரேக்க மற்றும் எகிப்திய நூல்கள் அழிந்துபோயிருக்கும். இது ஒரு சிறப்பான பணியாக கணித துறையில் பாராட்டப்படுகிறது. மொழி பெயர்த்து தங்களுடைய பங்களிப்பை இந்த பிரிவில் காட்டியது மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் தங்களின் தனி முத்திரையையும் இந்த பிரிவில் பதித்தனர். பல புதிய முறைகளையும் அறிமுகப்படுத்தினர்.
"It had a large number of, geometrical problems for the fundamental construction of plane geometry to the constructions of the corners of a regular polyhedron on the circumscribed sphere of special interest is the fact that a number of these problems are solved by a single span of the compass, a condition which we find for the first time here." --- H.Suter
இந்த துறையில் முஸ்லிம்களின் பணியானது கிரேக்கர்கள் மற்றும் ஹிந்துக்களின் பணியை விட மிக மேன்மையானதாக இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் (Muslims were much in advance of Hindus and Greeks in the development and use of geometry) . கேத்திர கணிதத்தில் "பை (Pi)" என்ற சொல்லுக்கு தசம பின்னல் (Decimal Fractions) முறைப்படி ஒன்பது எண்களைக்கொண்டு விடையளித்தவர் நாம் முன்னே பார்த்த அல்-கசி (Al-Kashi) அவர்கள்.
"In 1424 Al-Kashi published a treatise on circumference, in which he calculated "pi", the ratio of a circle's circumference to its diameter, to nine decimal places. Nearly two hundred years would pass before another mathematician surpassed this achievement"
முஸ்லிம்கள், எண்ணற்ற நூல்களை இந்த பிரிவில் எழுதினர், அவை முஸ்லிம்களின் கணித அறிவுக்கு மற்றுமொரு சான்று. இந்த துறையில் சிறந்து விளங்கிய முஸ்லிம்களில் சிலர்
  • முஹம்மது, ஹசன் மற்றும் அஹ்மத் சகோதரர்கள்
  • அபுல் வாபா அல்-பஸ்ஜனி (Abul wafa al-Buzjani)
  • நசீருதின் அல்-தூசி (Nasiruddin al-Tusi)
  • தபித் பின் குர்ரா (Thabit bin qurra)
  • அல்-இஸ்பாஹனி (Al-Isfahani)
4. கோணவியல் (Trigonometry)
கோணவியல், பல்வேறு பொருள்களுக்குண்டான தூரத்தை அளக்க பயன்படும் கணிதத்தின் ஒரு பிரிவு. முஸ்லிம்களுக்கு முன்னால் பாபிலோனியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ஹிந்துக்கள் என்று பலரும் இந்த பிரிவைப்பற்றி அறிந்து வைத்திருந்தனர். ஆனால் நாம் இப்போது அறிந்திருப்பது போல அது கணிதத்தின் ஒரு பிரிவு கிடையாது. வான சாஸ்த்திரத்தில் ஒரு பகுதியாகவே அறியப்பட்டிருந்தது. முதன் முதலில் கோணவியலை வான சாஸ்த்திரத்தில் இருந்து பிரித்து அதனை கணிதத்தின் ஒரு பிரிவாக கையாண்டது முஸ்லிம்கள்தான். இதனை செய்தவர் நசீருதின் அல்-தூசி (Nasiruddin al-Tusi), இவர் தான் இன்று நாம் பயன்படுத்தக்கூடிய உருண்டை கோல கோணவியலை (Spherical Trigonometry) தற்போதைய நிலைக்கு உருவாக்கியவர். அதனாலயே இவர் கோணவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். கோணவியலில் பல புதுமைகளை புகுத்தியவர்கள் முஸ்லிம்கள்தான்.
"It was after this development in Islamic mathematics that the first real trigonometry emerged" --- E. S. Kennedy
  • சமதள கோணவியலை (Plane Trigonometry) உருவாக்கியதும் நாம்தான்.
  • சைன் மற்றும் கோசைன் (Sine and Cosine tables) குறித்த தகவல்களை துல்லியமாக கணக்கிட்டது முஸ்லிம்கள்தான்.
  • டேஜன்ட் டேபல்ஸ் (Tangent tables) முறையை முதலில் கொண்டுவந்தது முஸ்லிம்கள் தான்....
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். கோணவியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இன்றைய கோணவியலுக்கு வழிகாட்டி.... இந்த துறையில் சிறந்து விளங்கிய முஸ்லிம்களில் சிலர்
  • அல் கரிஷ்மி (Al-Khwarizmi)
  • அல் பதானி (Al-Battani)
  • ஜபிர் பின் ஆபியா (Jabir bin Afiah)
  • அபுல் வாபா அல்-பஸ்ஜனி (Abul wafa al-Buzjani)
  • அபுல் ஹசன் கொஷியர் (Abul Hasan Koshiar)
  • அபு ரய்ஹன் பிருணி (Abu Rayhan Biruni)
  • தகி அல்-டின் (Taqi Al-din)
  • ஜம்ஷெட் அல்-கசி (Jamshed al-Kashi)
  • ஓமர் கையாம் (Omar Khayyam)
இப்படிப்பட்ட மேதைகளை தான் இஸ்லாமிய உலகம் கணிதத் துறைக்கு கொடுத்தது. அவர்கள், அவர்களது காலத்தில் கணிதத்தில் முன்னோடிகளாக இருந்தது மட்டுமில்லாமல் இன்றைய பல கணித முறைகளுக்கும் அவர்கள் தான் வழிகாட்டி. ஐரோப்பிய உலகம் இவர்களது நூல்களை பத்தொம்பதாம் நூற்றாண்டு வரை மொழிபெயர்த்து கொண்டு, தங்களது ஆராய்ச்சிகளை இவர்களது உதவியைக் கொண்டு முன்னேற்றி சென்றது.
"சமீபத்திய ஆராய்ச்சிகள் நாம் அரேபிய/இஸ்லாமிய கணித முறைகளுக்கு கடன் பட்டிருப்பதாக கூறுகின்றன. நாம் இன்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே, இன்றைய கணிதத்தின் பல அற்புதமான எண்ணங்களை 16,17,18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய கணிதமேதைகள் கண்டுபிடித்ததாக, அவையெல்லாம் நிச்சயமாக அரேபிய/இஸ்லாமிய எண்ணங்கள் என்று இப்போது தெரிய வருகின்றன. பல கோணங்களிலும், இன்று நாம் படிக்கக்கூடிய கணித முறைகளின் பாணி, கிரேக்கர்களின் கணித பாணியை விட அரேபிய/இஸ்லாமிய கணித முறைகளையே மிகவும் ஒத்துவருகிறது" --- John J.O'Conner and Edmund F.Robertson, The MacTutor History of Mathematics
"Recent research paints a new picture of the debt that we owe to Arabic/Islamic mathematics.Certainly many of the ideas which were previously thought to have been brilliant new conceptions due to European mathematicians of the sixteenth, seventeenth and eighteenth centuries are now known to have been developed by Arabic/Islamic mathematicians around four centuries earlier. In many respects the mathematics studied today is far closer in style to that of the Arabic/Islamic contribution than to that of the Greeks" --- John J.O'Conner and Edmund F.Robertson, The MacTutor History of Mathematics
ஆக, கீத் டெவ்ளின் (Keith Devlin) அவர்கள் சொன்னது போல, முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லையென்றால் இன்றைய கணிதத்துறை எப்படி இருந்திருக்கும் என்பது தெளிவாகவில்லை. அப்படிப்பட்ட தாக்கத்தை முஸ்லிம்கள் கணிதத்துறையில் ஏற்படுத்தியுள்ளனர். இதனை யாரும் மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். முஸ்லிம்களின் இந்த சாதனைகள் இஸ்லாத்தை சுற்றியே வந்துள்ளன. உதாரணத்துக்கு பிறையை கணக்கிட தொடங்கியே வான சாஸ்த்திரத்தில் சிறந்து விளங்கினர். அவர்களுக்கு பெரும் ஊக்கமாய் இருந்தது குரான். சற்று சிந்தித்து பாருங்கள், நான் மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் எல்லோரும் குரான் அருளப்பட்ட காலத்திற்கு பிந்தியவர்கள் தான். குரான் அருளப்படுவதற்கு முந்தைய அரேபியர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். இந்த தலைக்கீழ் நிலைமைக்கு காரணம் இஸ்லாம். இங்கே நான் குறிப்பிட்டுள்ளவை மிகச் சிறிதே. நீங்கள் அறிவியலின் எந்த ஒரு முக்கிய துறையை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள், அதில் முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமலில்லை. நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களானால் உணர்ந்து கொள்வீர்கள். வியப்பின் எல்லைக்கு செல்வீர்கள். இதையெல்லாம் ஏன் நம் சகோதரர்கள் பள்ளிகளில் படிப்பதில்லை? ஏன் சில தகவல்கள் திட்டமிட்டு திசைதிருப்ப படுகின்றன? இறைவனே எல்லாம் அறிந்தவன்.
  • நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?
  • அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?
இனி இதைப் போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினமாக இருக்காது...ஆம் பதினேழாம் நூற்றாண்டு முதல் பத்தொம்பதாம் நூற்றாண்டு வரை, சுமார் 300 ஆண்டுகள் நமக்கு இருண்ட காலம்தான். இதற்கு பல காரணங்களை சொல்லலாம். ஒவ்வொரு சமுதாயமும் இது போன்ற காலங்களை சந்தித்து தான் வந்துள்ளன.
இதையெல்லாம் விடுங்கள், சமீபத்தில் ஒரு மாற்றுமத சகோதரர், ஹைய்தி தீவில் ஏற்பட்ட இயற்கை சீரழிவிற்கு முஸ்லிம் உலகம் என்ன செய்தது? என்று கேட்டார் பாருங்கள்....அதிர்ந்து விட்டேன். ஏன் இது போன்ற எண்ணங்கள் உருவாகுகின்றன? அவர் கேட்ட கேள்விக்கு ஆதாரங்களுடன் தெளிவாக பதில் சொல்லிவிட்டேன். ஆனால் அந்த கேள்வி சொல்லும் அர்த்தங்கள் பல இருக்கின்றன...

"ஒசாமா பின் லேடன் வாஷிங்டனில் இருக்கின்றார்" - அஹ்மதிநிஜாத்

ஈரான், செப்டம்பர் 17 : ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், அவருடைய பேச்சையோ அல்லது உரையாடல்களையோ கேட்டதோ, பார்த்ததோ இல்லை. அவருடைய சமீபத்திய நேர்காணல் ஒன்றை தமிழில் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது. சென்ற மாதம் நான்காம் தேதி, ABC தொலைக்காட்சியின் "குட் மார்னிங் அமெரிக்கா" நிகழ்ச்சியில் பங்கேற்றார் அஹ்மதிநிஜாத். அவரை பேட்டி கண்டது பிரபல தொலைக்காட்சி செய்தியாளரான ஜார்ஜ் ஸ்டீபனோபவ்லோஸ் அவர்கள்.
அதிரடியான நேர்க்காணல் அது. அணு ஆயுத பரவல் உடன்பாட்டைப் பற்றிய கலந்தாய்வில் ஐக்கிய நாடுகள் சபையில் அஹ்மதிநிஜாத், "ஈரானின் அணு செறிவு நடவடிக்கை உலகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. மாறாக அமெரிக்காவே உலகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது" என்று உரையாற்றியதற்கு மறுநாள் இந்த நேர்காணல் நடைப்பெற்றது. "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்" என்று தன்னுடைய பேச்சை தொடங்கிய ஈரான் அதிபர், தன்னுடைய பதில்களால் பார்வையாளர்களை அசர வைத்தார்
அப்போது கேட்க பட்ட கேள்விதான்,
ஒசாமா பின் லேடன் ஈரானில் இருக்கின்றாராமே?
அதற்கு அஹ்மதிநிஜாத் அவர்கள் அளித்த பதில், "அவர் வாஷிங்டனில் இருக்கின்றார். அவர் அங்கிருப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்....."
இந்த பதில் உங்களுக்கு வியப்பை அளித்திருந்தால் இது தொடர்பான முழுமையான உரையாடலை தொடர்ந்து வாசியுங்கள்...
......ஒரு ஆவணப்படம் சமீபத்தில் வெளிவந்திருக்கின்றது, அது ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக தெரிவிக்கின்றது. அதில் ஈரானில் வசிக்கும் அலன் பாரோட் என்ற நபர், 2003 ஆம் ஆண்டு முதல் பலமுறை ஒசாமா பின் லேடனுடன் தான் பேசியதாக குறிப்பிடுகின்றார். ஒசாமா பின் லேடன் தெஹ்ரானில் (Tehran-Capital of Iran) இருக்கின்றாரா?
(சிரிக்கின்றார்)...உங்கள் கேள்வி என்னை சிரிக்க வைக்கிறது. ஏன்? அமெரிக்க அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் நுழைந்ததே ஒசாமா பின் லேடனை பிடிக்கத்தான். அவர்களுக்கு பின் லேடன் எங்கிருக்கின்றார் என்று தெரிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அப்படி தெரிந்திருக்கவில்லையென்றால் ஏன் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய வேண்டும்? அவர்களுக்கு தெரிந்திருந்தால் அவரை கண்டுபிடித்திருப்பார்கள். அவரைப் பிடித்திருப்பார்கள். முதலில் அவர் எங்கிருக்கின்றார் என்று அறிந்து கொள்ள முயற்சித்திருக்க வேண்டும், பிறகு தான் நுழைந்திருக்க வேண்டும். அவர் எங்கிருக்கின்றார் என்றே தெரியாமல் ஒரு நாட்டிற்குள் நுழைந்து விட்டு பிறகு தேடுவதென்பது தர்க்க ரீதியாக ஒத்துவருகின்றதா? இது தர்க்க ரீதியாக சரியென்று உணர்கின்றீர்களா? என் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன். அவர் தெஹ்ரானில் இருக்கின்றாரா இல்லையா? எங்கள் நிலை தெளிவாகவே இருக்கின்றது. சில பத்திரிக்கையாளர்கள், பின் லேடன் ஈரானில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மற்றும் தீவிரவாதம் மீதான எங்கள் நிலைப்பாடு தெளிவாகவே இருக்கின்றது. அது உண்மையா இல்லையா? உங்களுக்கு தெரிந்திருக்கலாம், எனக்குத் தெரியவில்லை. நான் உங்களை கேட்கின்றேன். நீங்கள் தான் ஈரானின் அதிபர். எனக்கு அப்படி எதுவும் தெரியாது. நீங்கள் தான் மிக விசித்திரமான செய்தியை சொல்லுகின்றீர்கள். சரி, நான் வேறு விதமாக கேட்கின்றேன். ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக உங்களுக்கு தெரிய வந்தால், நீங்கள் அவரை உபசரிப்பீர்களா அல்லது வெளியேற்றுவீர்களா அல்லது கைது செய்வீர்களா? ஒசாமா பின் லேடன் வாஷிங்டனில் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். இல்லை. நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது. ஆம், நான் கேள்விப்பட்டேன். அவர் அங்கு தான் இருக்கின்றார். ஏனென்றால் அவர் புஷ்ஷினுடைய பழைய பங்குதாரராக இருந்திருக்கின்றார். அவர்கள் தோழர்களாக இருந்திருக்கின்றார்கள். அது உங்களுக்கு தெரியும். அவர்கள் எண்ணெய் வியாபாரத்தில் ஒன்றாக ஈடுபட்டிருக்கின்றார்கள். ஒன்றாக சேர்ந்து பணி புரிந்திருக்கின்றார்கள். பின் லேடன் ஈரானுடன் ஒத்துழைத்ததே இல்லை, ஆனால் அவர் புஷ்ஷுடன் ஒத்துழைத்திருக்கின்றார் -- உங்களிடம் இன்னும் ஒரேயொரு முறை கேட்கின்றேன். ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக உங்களுக்கு தெரிய வந்தால், நீங்கள் அவரை உபசரிப்பீர்களா அல்லது வெளியேற்றுவீர்களா அல்லது கைது செய்வீர்களா? எங்களுடைய எல்லைகள் சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு மூடப்பட்டுள்ளன. அது யாராக இருபினும் சரி. .......ஒசாமா பின் லேடனாகட்டும், இல்லை வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். எங்கள் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. எங்கள் நிலை தெளிவாக உள்ளது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை, தினமும் வெளியாகும் செய்திக்கேற்ப அனுசரித்து செல்வது எனக்கு ஆச்சர்யத்தை தருகின்றது. இது போன்ற செய்திகளுக்கேற்ப தான் அமெரிக்க அரசாங்கம் தன் நிலைப்பாட்டை எடுக்கின்றதோ என்று வருத்தப்படுகின்றேன். அப்படியிருந்தால் அது மிகவும் வேதனையானது. செய்திகள் துல்லியமாக இருக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் அது இரு நாடுகளுக்கு மத்தியிலான உறவை பாதிக்கும், இதோ இது போன்று. அமெரிக்க அரசாங்கத்திற்கு பின் லேடனின் இருப்பிடம் தெரிந்திருந்ததா? அதற்கு நீங்கள் என்ன கூறுகின்றீர்கள், "இல்லை, அவரை அங்கு கண்டுபிடிக்க சென்றார்கள் என்று". முதலில் நீங்கள் அவர் இருப்பிடத்தை--- அவர்கள் பின்னடைந்து விட்டார்கள். அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறாரா என்று பார்க்க போனதாக கூறுகின்றீர்கள். முதலில் அவர் எங்கிருக்கின்றார் என்று தெரிந்துகொண்டு பிறகு அந்த நாட்டிற்குள் நுழைந்திருக்க வேண்டும். இது எப்படி இருக்கிறதென்றால், ஒரு நீதிபதி முதலில் ஒருவனை கைது செய்ய சொல்லி விட்டு பிறகு ஆதாரங்களை கேட்பது போலிருக்கின்றது. ஒசாமா பின் லேடன், தெஹ்ரானில் இல்லை என்று சொல்லுகின்றீர்கள்? அவர் வாஷிங்டனில் இருக்கின்றார். அவர் அங்கிருப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். என்னால் உடன்பட முடியவில்லை..... அஹ்மதிநிஜாத் அவர்களின் இது போன்ற பதில்கள் என்னை வியக்க வைத்தன. ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் (Uranium enrichment) குறித்து நடந்த உரையாடல் இன்னும் சுவாரசியமானது. அமெரிக்கா மட்டுமல்ல, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனும் கூட. நான் (ரஷ்ய) அதிபர் மெத்தடெவுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பேசினேன் அவரும் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கூறினார். ஈரான் அதிவிரைவாக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றது. எங்கள் மீது திணிக்கப்படும் எந்த ஒன்றையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்திற்கு புறம்பான எந்தவொரு அறிக்கையையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்று அல்லது நான்கு நாடுகள் அணுகுண்டுகள் வைத்துக்கொண்டு, ஆனால் மற்ற நாடுகள் அமைதியான முறையில் அணுசக்தி உற்பத்தி செய்வதை தடுப்பதென்பது சட்டத்தை மீறுவதாகும். இது அநியாயமானது. எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. காலம் கடந்து விட்டது, எங்களை அச்சுறுத்துவதன் மூலமோ அல்லது அழுத்தம் கொடுப்பதன் மூலமோ பணிய வைக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரை சட்டத்திற்குட்பட்டு எங்களுடன் அனுசரித்து செல்வதே சிறந்தது. ...நீங்கள் சர்வதேச சட்டங்களைப் பற்றி பேசுகின்றீர்கள், நட்பு மற்றும் நியாயங்களை பற்றி பேசுகின்றீர்கள். ஆனால், உலகில் பலரும் அணு ஆயுதங்கள் தொடர்பான உங்களது நிலையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியவில்லையா ? 118 அணி சேரா உறுப்பினர்கள் எங்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள். 57 இஸ்லாமிய நாடுகள் எங்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்திருக்கின்றார்கள், இவை அவர்களது கணக்கில் வரவில்லையா? ஆனால், விதிகளுக்குட்பட்டு ஏனைய நாடுகளும் அணு சக்தியை உபயோகப்படுத்தலாமென ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. இல்லை, அவர்கள் அப்படி செய்யவில்லை. அணு ஆயுதப் பரவல் உடன்பாட்டை (NPT) பொறுத்தவரை ஆயுதக் குறைப்பு நடந்திருக்க வேண்டும். எத்தகைய ஆயுதக் குறைப்பு இதுவரை நடந்து விட்டது? NPT-ன் நான்காம் பிரிவை பொறுத்தவரை (Article IV), எல்லா உறுப்பு நாடுகளும், எந்த ஒரு முன் நிபந்தனைகளுமின்றி, தொழில்நுட்பம் மற்றும் அணு எரிபொருள் உற்பத்தி போன்றவற்றிற்கு பரஸ்பரம் உதவிக்கொள்ள வேண்டும். அதேபோல, உறுப்பு நாடுகள் செறிவூட்டல் செய்வதை தடுப்பதற்கு எந்த ஒரு காரணமும் சொல்லக் கூடாது. இதுதான் NPT. அணு ஆயுதப் பரவல் உடன்பாட்டை வாசியுங்கள். உறுப்பு நாடுகள் தங்கள் வசதிகளை ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டுமே? என்னைப் பேச விடுங்கள். இதுதான் NPT சொல்லுவது. இப்போது, சிலர் எங்களுக்கு அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்கவும், எங்களது நிலைப்பாட்டை கட்டாயப்படுத்தி மாற்றவும் முயற்சித்தனர். ஆனால் இவையெல்லாம் எங்களை கட்டுப்படுத்தாது. நேற்று எங்களது நிலைப்பாடு குறித்து பதிலளித்தேன், ஐக்கிய நாடுகள் சபையில் நேற்றைய தினம் நான் ஆற்றிய உரையை நீங்கள் வாசித்தீர்களேயானால் என்னுடைய பதில்களை அங்கேயே காணலாம். உங்களுடைய உரையை நான் வாசிதேன். அதுமட்டுமின்றி, ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட்டதாக சொல்லியிருந்ததையும் வாசிதேன். ஆனால், IAEA (International Atomic Energy Agency, சர்வதேச அணுசக்தி கழகம்) ஒப்புக்கொள்ளவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் செயலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. நிச்சயமாக அமெரிக்க அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை. எதற்காக உடன்பட மறுக்கின்றார்கள்? நீங்கள் உடன்பாட்டை எட்டவில்லை. அவர்கள் சொல்லுகின்றார்கள், நீங்கள் உங்கள் செயல்களை மாற்றிக்கொள்ள--- அவர்களுக்கு இதில் என்ன பிரச்சனை? நாங்கள் செறிவூட்டல் பண்ணுகின்றோமோ இல்லையோ, இதில் அவர்கள் ஏன் தலையிட வேண்டும்? நான்காம் விதி சொல்லுகிறது அவர்களுக்கு அந்த உரிமை இல்லையென்று. கவனியுங்கள், தலைமை செயலாளரோ, IAEA -வின் மற்ற எந்தவொரு உறுப்பு நாடுகளோ, அல்லது எந்தவொரு அரசாங்கமோ நாங்கள் செறிவூட்டல் செய்வதை தடுக்க முடியாது. இது தெளிவாகவே இருக்கின்றது. அவர்கள் தான் சட்டத்தை மீறுகின்றார்கள். நாங்களல்ல. அவர்கள் NPT -ன் விதிகளை மீறுகின்றார்கள். அவர்கள் அப்படி செய்வது நியாயமுமல்ல. விதிமுறைகளை மீற உங்களுக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாதென்று நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலரிடம் கூறினேன். உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விருப்பம். ஐக்கிய நாடுகள் சபை, ஈரானை மையமாக வைத்து இயங்கினால், அதன் தலைமைச் செயலர் இதையே கூறுவாரா? இது----என்னால் இதற்கு பதில் சொல்ல முடியாது--- என்னை பேச அனுமதியுங்கள். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவில் எங்களுக்கு வீட்டோ அதிகாரம் இருந்தால், நாங்கள் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவின் நிரந்தர உறுப்பினராக இருந்தால், தலைமைச் செயலர் இதையே கூறுவாரா? அல்லது மாற்றிக் கூறுவாரா? இத்தகைய நியாயமற்ற விதிமுறைகளே பாதுகாப்பின்மை, போர்கள் போன்றவை தோன்றுவதற்கு அடிப்படை காரணமென்று நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். சீர்திருத்தங்களுக்கு தெளிவான ஆலோசனைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். இன்றைய நிலையில், உலகின் பெரும்பான்மையான நாடுகள் நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு நிறுவப்பட்ட விதம் நியாயமில்லாதது என்றும் நினைக்கின்றார்கள். வீட்டோ அதிகாரம் உள்ள நிரந்தர உறுப்பினர்கள், கழகத்திடம் தங்கள் கருத்துகளை திணிப்பது தெளிவாக தெரிகின்றது. IAEA வின் நிர்வாகிகள் சபையில் நிரந்தர உறுப்பினராக உள்ளவர்கள் தங்கள் கருத்துகளை திணிப்பது தெளிவாக தெரிகின்றது. ஏன் அறுபது ஆண்டுகளுக்கு பின்னரும் ஆயுதக் குறைப்பு நிகழவில்லை? நான் உங்களை கேட்கிறேன். அணு குண்டுகள் வைத்திருப்பது அல்லது அணு குண்டு வைத்திருக்க முனைவது, இதில் எது மிகவும் ஆபத்தானது? நேற்று அமெரிக்கா "எங்களிடம் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் இருக்கின்றன"என்று அறிவித்தது. ஐந்தாயிரம் அணுகுண்டுகள் ஆபத்தானதா? அல்லது ஒரு நாடு அணுகுண்டு உருவாக்கலாமென்று எண்ணுவது ஆபத்தானதா? இதில் எந்தவொன்று உலக பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கின்றது? ஈரான் அதிபரின் வார்த்தைகள் தெளிவாக, கூர்மையாக வந்து விழுந்தன. இஸ்ரேல் பற்றி உரையாடல் திரும்பிய போது,
உங்களிடம் உரையாடியதிலிருந்து எனக்கு என்ன புரிகிறதென்றால், நீங்கள் உங்கள் மீதான மற்றுமொரு நடவடிக்கைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், இதை கவனிக்கும் பெரும்பாலானவர்களுக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால், ஈரான் தன்னுடைய தற்போதைய பாதையை தொடர்ந்தால், இஸ்ரேல், பிரச்னையை தானே எதிர்க்கொள்ள முன்வரும். ஈரானின் அணு திட்டங்களை இராணுவத்தின் மூலம் எதிர்க்கொள்ளும். ஈரான் தற்போது எந்த பாதையில் செல்கின்றதோ, அதே பாதையில் தொடர்ந்து செல்லும். அதில் உங்களுக்கு எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். ஆனால், நீங்கள் நெருப்போடு விளையாடுவதாகத் தெரியவில்லையா?, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி கவலை இல்லையா? இல்லை. ஏன்? குண்டுகளை குவித்துக் கொண்டும், தங்கள் விருப்பங்களை மற்றவர்கள் மேல் திணித்துக்கொண்டும் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் அவர்கள் தான் நெருப்புடன் விளையாடுகின்றார்கள். நாங்கள் குண்டுகளை குவித்து வைத்திருக்கின்றோமா? எங்களிடம் அணு குண்டுகள் இருக்கின்றதா?, அணு குண்டை இதுவரை உபயோகப்படுத்தியது யார்?, யார் தங்களிடமுள்ள குண்டுகளை வைத்து மற்றவர்களை அச்சுறுத்துவது?, நாங்களா அல்லது அமெரிக்க அரசாங்கமா? இராணுவ நடவடிக்கைப் பற்றி? பேச விடுங்கள். யார் ஆபத்தானவர்கள்? யார் எங்கள் மீது போர்த்தொடுக்க நினைப்பது? என்னையா ? ஆம், உங்களைத் தான் கேட்கின்றேன். யார் எங்கள் மீது போர்த்தொடுக்க நினைப்பது? இல்லை. ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாமென்று தான் சொல்லுகின்றேன். இவ்வாறு நீங்கள் சொல்லும்போது உங்களிடம் நான் கேட்க விரும்புவது, எங்கள் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பார்களென்று யாரை தாங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? அமெரிக்காவையா? அமெரிக்கா எங்களைத் தாக்க போகின்றதா? இல்லை. நான் கேட்டது, நீங்கள் இது பற்றி கவலைக் கொள்ளவில்லையா என்று? நீங்கள் இது வரை இதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்... நாங்கள் இஸ்ரேலை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. அப்படி ஒருவேளை அது நடந்தால் உங்களிடம் எந்த திட்டமும் இல்லையா? அவர்கள் முடிந்து விட்டார்கள். சியோனிஸ ஆட்சி முடிந்து விட்டது. அவர்களால் காசாவைக் கூட சமாளிக்க முடியவில்லை. எங்களிடம் வரப்போகின்றார்களா? எல்லோருக்கும் இது தெரியும். பத்திரிகைத் துறையில் வல்லுனரான உங்களுக்கு இது தெரியாமல் இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கின்றது. உலக அரசியல் வல்லுனர்கள் அனைவருக்கும் இது தெரியும். சியோனிஸ ஆட்சியால் காசாவை சமாளிக்க முடியவில்லை. எங்களுடன் பிரச்னைக்கு வருவார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? ஆக, நீங்கள் ஐக்கிய நாடுகள் சபை பற்றி கவலைப்படவில்லை. இஸ்ரேல் பற்றியும் கவலைப்படவில்லை. நீங்கள் உங்கள் நாட்டில், உங்களுக்கு எதிராகவுள்ள மக்களைப் பற்றியாவது கவலைப்படுகின்றீர்களா?, இதற்கு ஆதாரம் உள்ளது. ஏனென்றால், வெளிப்புற பார்வையாளருக்கு, ஈரானிய அரசின் நடவடிக்கைகள், அவர்கள் போராடுபவர்களை சிறையிலிடுவது, போராடுபவர்களை தூக்கிலிடுவது போன்றவை உங்கள் அரசுக்கு எதிராக மக்கள் இருப்பதைக் காட்டுகின்றது. நீங்கள் இது பற்றி கவலைக் கொள்வதாக தெரிகின்றது. எந்த நாடு எங்களைத் தாக்கும் என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டு கொண்டிருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? இது போன்றதொரு பாதுகாப்பைத் தான் அமெரிக்கா உலகில் ஏற்படுத்தியிருக்கின்றதா? இத்தகைய நாகரிகத்தை தான் அமெரிக்கா உலகிற்கு பரிசாக கொடுத்துள்ளதா? இது தான் அமெரிக்க சுதந்திரம் மற்றும் ஜனநாயகமா? நாங்கள் சுதந்திரமானவர்கள், எங்கள் நாடுகளில் எங்கள் விஷயங்களை கவனித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மற்றவர்களின் தாக்குதலைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? சியோனிஸ ஆட்சியிடமிருந்து? அமெரிக்காவிடமிருந்து? நீங்கள் உங்கள் நாட்டைப் பற்றி எந்த மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றீர்கள் என்று புரிந்திருக்கவில்லையா? உங்கள் அதிகாரிகளுக்கும் தெரியவில்லை, திருமதி கிளிண்டனுக்கும் புரியவில்லை. இல்லை, இங்கே என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் நாட்டைப் பற்றி எந்த மாதிரியான பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. ஏழாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த நாடான ஈரான், என்றென்றும் அமைதி மற்றும் நட்பையே விரும்பி இருக்கின்றது, நாகரிகத்தின் மத்தியில் இருந்த நாடு. எந்த ஒரு நாட்டின் மீதும் படையெடுத்ததில்லை, எப்போதும் நியாயத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றது. ஆனால் நீங்கள் சொல்கின்றீர்கள் நாங்கள் அச்சத்திற்கு நடுவே வாழ வேண்டுமென்று. நீங்கள் பிரதிபலிக்கக்கூடிய அமெரிக்காவைப் பற்றிய பிம்பம் சரியானதன்று. அமெரிக்காவை எதிர்ப்பது ஈரான் மட்டுமன்று. அமெரிக்காவின் நடவடிக்கையால் எல்லா நாடுகளும் அதை எதிர்க்கின்றன. ஐரோப்பாவில் மட்டும் சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட்டால், மக்கள் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகத்தான் இருப்பார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன். அவர்கள், ஈரான் அச்சத்துடன் தான் வாழ வேண்டுமென்று சொல்லுகின்றார்கள். எதற்காக? எதற்காக அவர்கள் எங்களை தாக்க நினைக்க வேண்டும்? தீவிரவாதம் மற்றும் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து அவர் கூறியது, நீங்கள் அமைதியை விரும்புவதாக சொல்லுகின்றீர்கள். ஒரு முஸ்லிமாக நீங்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பதாக சொல்லுகின்றீர்கள். இங்கே அமெரிக்காவில், டைம்ஸ் சதுக்கத்தை குண்டு வைத்து தகர்க்க முயற்சி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் அமெரிக்க நகரங்களை தாக்கப் போவதாக சொல்லியிருக்கின்றது. ஒரு முஸ்லிமாக இவற்றை நீங்கள் எதிர்க்கின்றீர்களா? நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம். மிக கடுமையாகவே எதிர்க்கின்றோம். நாங்கள் ஏராளமானவர்களை தீவிரவாதத்திற்கு பலி கொடுத்து விட்டோம். ஈரானில் அதிபர், பிரதமர், சட்டத்தலைவர், 26 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் என்று பலரும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம், அதே சமயம் அது சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும். உங்களிடம் நான் கேட்கின்றேன். அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் நுழைந்து இது பத்தாவது வருடம். தீவிரவாதம் குறைந்திருக்கின்றதா, அதிகமாகி இருக்கின்றதா?. அமெரிக்காவின் அணுகுமுறை தவறென்று தெளிவாக தெரிகின்றது. அமெரிக்கா உள்ளே நுழைந்ததிலிருந்து இதுவரை ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். தீவிரவாதமும் பெருகி இருக்கின்றது. சமீபத்தில் 400 ஈரானியர்களை கொன்ற ரெகி என்பவனை நாங்கள் கைது செய்தோம். அவன் எங்கே ஒளிந்திருந்தான்?, பாகிஸ்தானிலா?, இல்லை ஆப்கானிஸ்தானிலா? யார் அவனுக்கு ஆதரவளித்தது? அமெரிக்க இராணுவம் தான். இது மிகவும் மோசமானது. ஏன் இப்படியிருக்க வேண்டும்? நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம், அப்பாவி மக்களின் வாழ்விற்கு அச்சுறுத்தலாய் இருப்பதை எதிர்க்கின்றோம்.
பேட்டி முழுவதும் மிகுந்த நிதானத்துடன் பதிலளித்தார் மஹ்மூத் அஹ்மதிநிஜாத். ஈரான் அதிபரின் உரையாடலிருந்து நான் புரிந்து கொண்டது,
  • ஈரானிய அரசாங்கம், தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கின்றது.
  • யாரையும் பார்த்து அச்சப்படும் நிலையிலும் அவர்கள் இல்லை.
  • தாங்கள் செய்வது சட்டத்திற்கு உட்பட்டது என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.
இந்த நேர்க்காணல் குறித்து ABC ஊடகத்தின் இணையத்தளத்தில் கருத்து தெரிவித்த பலரும் ஈரான் அதிபரின் வாதங்களில் அர்த்தம் இருப்பதாக குறிப்பிட்டனர். ஒரு அமெரிக்கர் அந்த தளத்தில் கூறியது,
இந்நாட்களில் அமெரிக்கா தான் உண்மையான எதிரியாக கருதப்படுகிறது.
நாம் மற்ற நாடுகள் மீது போர்த்தொடுத்து அவர்கள் எப்படி வாழ வேண்டுமென்று சொல்லவேண்டுமா?, நாம் மற்றவர்களுக்கு செய்வது போல, யாராவது நமக்கு செய்தால் நாம் என்ன நினைப்போம்?
அமெரிக்க வீரர்களை திரும்ப பெறுங்கள். அந்த நாடுகளை நிம்மதியாக வாழ விடுவோம். பிறகு நாமும் நம்முடைய வாழ்வை அமைதியான முறையில் அமைத்துக் கொள்வோம்.

நமது நிருபர்

ஆசிக் அஹ்மத்
source from muthupettai express

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)